January 19, 2021
தண்டோரா குழு
கேரளாவிலிருந்து கோவை வந்து தொடர்ந்து கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட கேரள கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கேரள மாநிலம் பாலக்காடு, மன்னார்காடு, கூட பட்டி ரோடு, தீபக் நிவாஸ் இல்லம், பகுதி கோவிந்தராஜ் என்பவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 31), இவர் கேரளாவில் இருந்து கோவை வந்து ரூம் எடுத்து தங்கியுள்ளார். இங்கு கிடைக்கக்கூடிய வேலையை செய்து கொண்டு வாரம் ஒருமுறை கேரளாவிலிருந்து கஞ்சா கொண்டு வந்து அதை பொட்டலங்களாக போட்டு கல்லூரி மாணவர்கள் மற்றும் கூலி வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு விற்பனை செய்து வந்தார்.
நேற்று மாலை தடாகம் போலீசாருக்கு வாலிபர் ஒருவர் கஞ்சா விற்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. தடாகம் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் மாங்கரை பாலம் அருகே சென்று ஆய்வு செய்தனர். அங்கு சதீஷ்குமார் கஞ்சா விற்பனை செய்த போது கையும் களவுமாக சிக்கினார். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமார் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த 1,200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.