January 12, 2021
தண்டோரா குழு
கோவை பூ மார்க்கெட் வளாகத்தின் உள்ள பழைய கட்டிடங்களை மாநகராட்சி அதிகாரிகள் இடிக்க முற்பட்டதால் வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் செயல்பட்டு வந்த பூ மார்க்கெட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளி இல்லாத காரணத்தினால் பூ மார்க்கெட்டை தற்காலிகமாக புரூக் பீல்டு சாலையில் உள்ள மைதானத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் பூ மார்க்கெட் வளாகத்தில் உள்ள பழைய கட்டிடங்களை திடீரென இடிக்க முற்பட்டதால் வியாபாரிகள் அந்த பகுதியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கட்டிடத்திற்கும், வியாபாரிகளுக்கு உத்திரவாதம் கொடுத்த பின்பு இடிக்க வேண்டும் என தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில்,
தற்போது மழை அதிகம் பெய்து வருவதால் தற்காலிக மார்க்கெட் சேரும் சகதியுமாக உள்ளதாகவும், இதனால் வியாபாரிகள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனர். தற்போது அனைத்து பகுதியிலும் தளர்வு அளிக்கப்பட்டு வந்தாலும் இந்த பூ மார்க்கெட் செயல்பாட்டுக்கு அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு தரவில்லை என தெரிவித்தனர்.இந்நிலையில் இப்போது பழைய கட்டிடத்தையும் இடித்தால் பூ வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்வி குறியாகி விடும் என வேதனை தெரிவித்தனர். பூ வியாபாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு பூ வியாபாரிகள் கலைந்து சென்றனர்.