January 11, 2021
தண்டோரா குழு
புகையில்லா போகியை கொண்டாட வேண்டும். இந்திய மருத்துவர் சங்கம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.
வருடம் தோறும் பொங்கல் பண்டிகைக்கு முன் தினம் போகி பண்டிகையானது கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த நாளில் மக்கள் பலரும் வீட்டில் உபயோகித்த பழைய பொருட்களை எரிப்பது வழக்கமாகவும் ஐதீகமாகவும் கொண்டுள்ளனர். இதனால் அந்நாளில் பல இடங்களில் கரும்புகை சூழ்ந்து காணப்படும். இதனை தடுக்க வேண்டுமென்றும் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்றும் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவர்கள் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் இருந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் உள்ள இந்திய மருத்துவ சங்கம் அலுவலகத்தில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய மருத்துவர் சங்கம் மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று கூறப்பட்டது. போகி பண்டிகையின் பொழுது மக்காத குப்பைகளை (பிளாஸ்டிக், டயர்) எரிப்பதனால் அதிகப்படியான கார்பன்-டை-ஆக்சைடு போன்ற நச்சுத்தன்மை கொண்ட வாயுக்கள் வெளியேறுகிறது. சில சமயங்களில் விமானப் போக்குவரத்துகள் கூட தடை படுகிறது என்று கூறினர்.
அதுமட்டுமின்றி தற்போது வைரஸ் தொற்று காலம் என்பதால் மாசுப்புகை நுரையீரல் மேலும் பாதிப்படைய கூடும். இதனால் வைரஸ் எளிதில் பரவ கூடும் என்று தெரிவித்தனர். பண்டைய காலங்களில் நம் முன்னோர்கள் மரத்தின் ஓலைகள் மரத்தினால் செய்யப்பட்ட வீட்டுப் பெருக்கம் போன்றவற்றை எரித்தனர், ஆனால் தற்பொழுது பிளாஸ்டிக், டயர் போன்றவற்றை எரிப்பதனால் அதிகப்படியான நச்சுத்தன்மை கொண்ட காற்று வெளியேறுகிறது என்றும் தெரிவித்தனர். எனவே மக்கள் அனைவரும் இந்த ஆண்டு முடிந்தவரை புகையில்லா போகியை இந்த வருடம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.