January 8, 2021
தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் முதற்கட்டமாக மருத்துவ பணியாளர்கள் உட்பட முன்கள பணியாளர்கள் 3316 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த பதிவு உள்ளது என கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி ஒத்திகை முகாம்கள் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை,மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை,கற்பகம் மருத்துவமனை, கிணத்துக்கடவு மற்றும் சமத்துவ ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 5 இடங்களில் கொரோனா ஒத்திகை முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கோவை அரசு மருத்துவமனையின் பிரதான கட்டிடத்தின் நான்காவது தளத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த காத்திருப்பு அறையுடன் கூடிய பிரத்யேக அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கோவை அரசு மருத்துவமனையில் முதற்கட்டமாக அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டம் உள்ளது எனவும், கோவை அரசு மருத்துவமனை ஊழியர்கள் 3316 பேருக்கு தடுப்பூசி செலுத்த முன் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
கடந்த ஜனவரி 2 ஆம் தேதி முதல் கட்டமாக கோவையில் 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.