January 7, 2021
தண்டோரா குழு
கோவையில் நேற்று மாலை முதல் பெய்யத்தொடங்கிய மழை விடிய, விடிய பலத்த மழையாக பெய்தது. இதனால் அவினாசி ரோடு மேம்பாலம், லங்கா கார்னர் பாலம், ரயில் நிலைய சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மழையால் பல இடங்களில் சாலைகள் சேறும், சகதியுமாக மாறியது.
இந்த மழையால் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள வாழைக்காய் மண்டி, தேவாங்கர் பள்ளி மைதானத்தில் உள்ள தற்காலிக பூ மார்க்கெட், எம்.ஜி.ஆர். மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கி சகதியாக காட்சி அளித்தது. இதனால் பொதுமக்கள்,வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர்.ரேஸ்கோர்ஸ் பகுதியில் தேங்கிய மழைநீர் காரணமாக பொதுமக்கள் நடைபயிற்சி செய்வது பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து வருவதால் கோவையில் உள்ள நரசாம்பாதி குளம், கிருஷ்ணாம்பதி குளம், குறிச்சி குளம், வாலாங்குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளங்களில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. நொய்யல் ஆற்றில் உள்ள புட்டுவிக்கி, சிங்காநல்லூர்,சுண்ணாம்பு கால்வாய் தடுப்பணைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பருவமழை தீவிரமாக பெய்து வருகிற போதிலும் நொய்யல் ஆறு தண்ணீர் இன்றி காணப்படுகிறது. ஒரு சில பகுதிகளில் கழிவுநீர் மட்டும் செல்கிறது.
கோவையில் பெய்த மழை அளவு விவரம்:
கோவை விமானநிலையம்-112.8மி.மீ., அன்னூர் 12 மிமீ, மேட்டுப்பாளையம்-23.1 மி.மீ.,சிங்கோனா – 15 மி.மீ.,சின்னகல்லார்-42 மி.மீ., வால்பாறை பி.ஏ.பி.-20 மி.மீ., வால்பாறை தாலுகா-18 மி.மீ. சோலையாறு-17 மி.மீ., ஆழியாறு 11 மி.மீ., சூலூர்-37 மி.மீ., கோவை தெற்கு-92 மி.மீ., பெரியநாயக்கன்பாளையம்-82 மி.மீ., வேளாண்மை பல்லைக்கழகம்- 70மி.மீ. என ஒரே நாளில் 587.90 மிமீ மழை பெய்துள்ளது.