December 30, 2020
தண்டோரா குழு
அதிமுக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை ரத்தினபுரி பகுதியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
கொரோனா நோய் தொற்று காலத்தில் முதலமைச்சர் பொங்கல் பரிசாக 2500 ரூபாய் அறிவித்துள்ளதாகவும், இதன் மூலம் கோவை மாவட்டத்தில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள் எனவும் 2500 ரூபாய் பொங்கல் பரிசை மு.க. ஸ்டாலின் எப்படி தடுக்க நினைத்தாலும் அதனை மக்களிடம் கொண்டு சேர்ப்போம் எனவும் தெரிவித்தார்.
நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றுவதில் மு.க.ஸ்டாலின் பி.ஹெச்.டி பட்டம் பெற்றவர் என விமர்சித்த அவர்
தொண்டாமுத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தை விதிகளுக்கு உட்பட்டு நடத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் அதற்கு தொண்டாமுத்தூரில் 3 ஆம் தேதி அதிமுக சார்பில் நடைபெறும் கூட்டத்தில் நடிகை விந்தியா மற்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பதிலடி தருவார்கள் எனவும் தெரிவித்தார். திமுகவினர் தன் மீது கூறும் ஊழல் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால் பதவி விலகத் தயாராக உள்ளதாகவும், அதேபோல ஸ்டாலின் பதவி விலகி மூத்த நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்குவாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.
இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க அப்போதைய மத்திய அரசுடன் இணைந்து ஆயுதங்களைக் கொடுத்து உதவியது திமுக தான் என்று குற்றம் சாட்டிய அமைச்சர் மீனவர் பிரச்சினை, கச்சத்தீவு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு காரணம் திமுகதான் என்றார். மேலும் தனது பதவி உள்ளவரை கோவை மக்களுக்கு வேண்டிய திட்டங்களை செய்து கொண்டே இருப்பேன் என உருக்கத்துடன் தெரிவித்த அவர் திமுகவினர் அவதூறு பரப்புவது பொய்ப் பிரச்சாரம் செய்வதை தவிர்த்து மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யுங்கள் என அறிவுறுத்தினார்.
முதல்வர் வேட்பாளர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அந்த கேள்வி தேவையற்றது எனவும் அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி தான் எனவும் தெரிவித்தார்.