December 28, 2020
தண்டோரா குழு
சொத்துக்களை அபகரித்துவிட்டு பராமரிக்க தவறுவதாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 4 மூதாட்டிகள் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அன்னூரை அடுத்த குப்பனூரை பகுதியை சேர்ந்தவர் முருகம்மாள் (97). இவருக்கு மாரக்காள் (75), லட்சுமி (70), பாப்பாத்தி (65) என்ற மூன்று மகள்களும் ரங்கசாமி (55) என்ற மகன் உள்ளார்.
முருகம்மாளுக்கு 12 ஏக்கரில் இடம் இருந்துள்ளது. இதனை ரங்கசாமி ஏமாற்றி எழுதி வாங்கியதாக குற்றம்சாட்டப்படுகிறது.
இந்த சூழலில், ரங்கசாமி உயிரிழந்துவிடவே அவரது மனைவியான பாப்பாத்தி (மற்றொருவர்) என்பவ முருகம்மாளை துன்புறுத்துவதாகவும், இடத்தை கொடுக்க முடியாது என்று கூறி அடாவடி செய்து வந்துள்ளார்.
இதுகுறித்து முருகம்மாள் கடந்த ஒரு ஆண்டாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து வந்துள்ளார். இது குறித்து நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையில், முருகம்மாள் மற்றும் அவரது மகள்கள் மாரக்காள், லட்சுமி மற்றும் பாப்பாத்தி ஆகிய நான்கு பேரும் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.
மேலும், வளாகத்தின் முன்புறம் நின்று மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணை ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர்.இதனை பார்த்த போலீசார் மூதாட்டிகள் மீது தண்ணீரை ஊற்றி அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர வைத்தனர்.இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகம் அருகே பரபரப்பு ஏற்படுத்தியது.