December 24, 2020
தண்டோரா குழு
கோவையில் தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக ஆறு மாதங்களுக்கும் மேலாக தொழில்கள் நிறுவனங்கள் முடங்கி இருந்தன. இதனால் தொழில்நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டன. இதனை அடுத்து மத்திய அரசு பல்வேறு கடன் திட்டங்களை தொழில்துறையினருக்கு அறிவித்தது. கோவையில் ஜாப் ஆர்டர்கள் செய்து வரும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுந்தொழில் முனைவோர்களுக்கு இந்த கடன் திட்டத்தால் எந்த ஒரு பலனும் இல்லை. எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடியாக கடன் தந்து உதவ வேண்டும்.
குறுந்தொழில் முனைவோர்கள் பொதுத்துறை, உற்பத்தி நிறுவனங்களுக்கு செய்து கொடுக்கும் ஆர்டர்களுக்கு, அந்நிறுவனங்கள் ஒரு மாதத்திற்குள் அதற்கான தொகையை தர வேண்டும். கோவையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குறுந்தொழில் முனைவோர்கள் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் வாடகை கட்டிடங்களில் தொழில் நடத்தி வருகின்றனர். வாடகை கட்டணங்கள் உயர்வு போன்றவற்றால் அவதியடைந்து வருகின்றனர்.
எனவே மேட்டுப்பாளையம் சாலை, சக்தி சாலை, திருச்சி சாலை போன்ற எந்த ஒரு பகுதியிலிருந்தும் வருவதற்கு சீரமம் இல்லாமல் கோவையின் மையப்பகுதியில் குறுந்தொழில் முனைவோர்களுக்கு தொழிற்பேட்டை அமைத்து தரவேண்டும். அதில் அரசு கட்டிடங்களை அமைத்து தொழிற்துறையினருக்கு வாடகைக்கு விட வேண்டும் மிகவும் குறைவாக வாடகைக்கு.
இவ்வாறு ஜேம்ஸ் கூறினார்.