December 14, 2020
தண்டோரா குழு
கோவையில் இன்று அதிகாலை பிரபல ரவுடியும் வழிப்பறி கொலைனுமான வாலிபரை, மூன்று பேர் சேர்ந்து கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கோவை கணபதி, மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் கரண் குமார் (வயது 30), இவர் கட்டப்பஞ்சாயத்து வழிப்பறி, கொலை, கொள்ளை அடிதடி உட்பட பல்வேறு விதமான குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவர் மீது கோவை காந்திபுரம், ரத்தினபுரி, பீளமேடு, சரவணம்பட்டி உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி வழிப்பறி கொலை வழக்குகள் உள்ளன.
இந்தநிலையில் சிறையில் இருந்து ஜாமினில் வெளிவந்த ரவுடி கரண் குமாருக்கு போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு உள்ளான். இந்த நிலையில் நேற்று கணபதி மணியக்காரன் பாளையத்தை அடுத்த நல்லாம்பாளையம் பகுதியில் அந்த வழியாக செல்லக்கூடிய நபர்களிடம் வழி மறித்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். அப்பொழுது அந்தப்பகுதியில் ஆட்டோவில் 3 பேர் வந்துள்ளனர்.ஆட்டோவை வழிமறித்த கரண் குமார் அவர்களை மிரட்டி பணம் பறிக்க முயற்சி செய்துள்ளான்.ஆட்டோவில் பயணம் செய்த 3 பேரும் ஆத்திரமடைந்து சரமாரியாக கரண்ட் குமாரை மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் கழுத்து முகத்தில் வெட்டினர்.இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ரவுடி சம்பவ இடத்திலேயே பலியானார்.கொலை செய்த 3 பேரும் எந்தவிதமான பதட்டமும் இன்றி நேராக சரவணம்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று தங்களுடைய ஆயுதங்களை கொடுத்து சரண்டர் ஆகி உள்ளன.
போலீஸ் விசாரணையில் அதே பகுதியில் வசிக்கக்கூடிய முத்து கணேஷ், ரவி சங்கர், சீனிவாசன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் போலீசார் 302 சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து மூன்று பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே ரவுடி கரண் குமார் குமாரால் பாதிக்கப்பட்ட இந்த மூன்று நபர்களும் திட்டமிட்டு கொலை செய்தார்களா? முன் விரோதமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் 3 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலை நடந்த இந்த கொலையால் கோவை கணபதி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.