December 12, 2020
தண்டோரா குழு
போதிய வசதிகளோ உபகரணங்களோ இல்லாத உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி பெற்ற மாணவர் மற்றும் பயிற்சியாளர் உலக அளவிலான பளு தூக்கும் போட்டியில் பதக்கம் வென்றுள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ்.அதே பகுதியில் ஆஞ்சநேயர் ஆரோக்கிய அபிவிருத்தி சங்கம் எனும் பெயரில் உடற்பயிற்சி சாலையை நடத்தி வரும் இவர், இங்கு கல்லூரி மாணவர்களுக்கு பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்வதற்கான பயிற்சிகளை இலவசமாக வழங்கி வருகிறார். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற உலக அளவிலான பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்ட இவர் சீனியர் பிரிவில் தங்க பதக்கம் வென்றுள்ளார். இவரை போலவே இவரிடம் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவரான சஞ்சய் ஜூனியர் பிரிவில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார். உடற்பயிற்சி சாலையில் போதிய வசதிகளோ,உபகரணங்கள் இல்லாத நிலையிலும் இந்த சாதனையை செய்த பயிற்சியாளர் எஸ்.பி.நாகராஜ் மற்றும் கல்லூரி மாணவர் சஞ்சய்யை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
பதக்கம் வாங்கி சாதனை புரிந்துள்ள நாகராஜ் கூறுகையில்,
கடந்த ஐந்து வருடங்களாக இந்த உடற்பயிற்சி கூடத்திலேயே பயிற்சி மேற்கொண்டு வருவதாகவும்,உடற்பயிற்சி கூடத்தில் மேற்கூரைகள் பழுதடைந்து இருந்த போதும் மழை வெயிலை பொருட்படுத்தாமல் இங்கு பயிற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறிய அவர்,அரசு இதில் கவனம் செலுத்தி எங்களை போன்றவர்களை ஊக்கபடுத்தும் வகையில் வசதிகள் செய்து கொடுத்தால் நமது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் மேலும் பதக்கங்களை வெல்வோம் என நம்பிக்கை தெரிவித்தார். சரியான வசதிகள் இல்லாத நிலையிலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று வரும் இவரை போன்ற சாதனையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.