December 8, 2020
தண்டோரா குழு
மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு சென்று வர சாதாரண நாட்களில் அதிகபட்சமாக ரூ.475 ஆக இருந்த நிலையில், தற்போது நபர் ஒருவருக்கு ரூ.2,500 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக டிக்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும், உதகை சிறப்பு மலை ரயிலை தனியாரிடம் தாரை வார்க்கும் மத்திய அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.ஊட்டி மலை ரயிலை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் என சுற்றுலா பயணிகளும், உள்ளூர்வாசிகளும் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், இதனை தெற்கு ரயில்வே நிர்வாகம் மறுத்துள்ளது.
இந்நிலையில், பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் எனும் நிலைமையை ரயில்வே உருவாக்கக் கூடாது என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக கமல் தனது டுவிட்டர் பக்கத்தில்,
பண்டிகை நாட்களை ஒட்டிய விடுமுறை தினங்களில்தான் குடும்பத்துடன் சுற்றுலா தலங்களுக்குச் செல்வார்கள். கூட்டம் கூடும் தினங்களில் ஊட்டி மலை ரயிலை தனியார் வாடகைக்கு எடுத்து இயக்கினால், டிக்கெட் விலை பன்மடங்காகத்தான் இருக்கும்.
எந்தச் சிறிய கொண்டாட்டமும், குதூகலமும் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் எனும் நிலைமையை ரயில்வே உருவாக்கக் கூடாது என பதிவிட்டுள்ளார்.