• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உதகை மலை ரயிலை தனியாரிடம் தாரை வார்ப்பதா – பி.ஆர்.நடராஜன் எம்பி கண்டனம்

December 6, 2020 தண்டோரா குழு

உதகை மலை ரயிலை தனியாரிடம் தாரை வார்த்து கட்டண கொள்ளைக்கு துணை போகும் ரயில்வே துறையின் நடவடிக்கைக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மலையை குடைந்து நூற்றுக்கணக்கான உழைப்பாளர்களின் உழைப்பில் உதகை ரயில் வழித்தடம் உருவாக்கப்பட்டது.மிக முக்கியமான சுற்றுலா மலை பாதை என்பதால் இதற்கு யுனஸ்கோவின் விருதை பெற்றுள்ளது. கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு தினமும் மலை ரயில் இயக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இதன் வழித்தடத்தில் சிறப்பு ரயிலும் கட்டணம் அடிப்படையில் இயக்கப்பட்டு வந்தது. சுமார் 4.5 லட்சம் ரூபாய் ரயில்வேக்கு கட்டணம் செலுத்தி சிறப்பு ரயிலை தனியார் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். ரயில்வே துறையே இயக்க வேண்டும் என தனியார் மயமாக்கும் நடவடிக்கைக்கு அப்போதே எதிர்ப்பு தெரிவித்திருந்தோம்.

இந்நிலையில் கொரானா தொற்று காரணமாக உதகை மலை ரயில் சேவையும், சிறப்பு ரயில் கட்டண சேவையும் நிறுத்தப்பட்டது. தற்போது வரை உதகை செல்ல இ பாஸ் நடைமுறை இருந்து வருகின்றது.இந்நிலையில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், மொத்தமாக ரயில்வே நிர்வாகத்திற்கு கட்டணத்தை செலுத்தி சிறப்பு மலை ரயிலை வாடகைக்கு எடுத்து இயக்கி வருகிறார். மலை ரயிலில் பயணிக்க நபர் ஒருவருக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் முதல் 12 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக டிக்கெட் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சிறப்பு ரயிலில் இருக்கும் தனியார் நிறுவன பணிப்பெண்கள்,விமானத்தில் பயணிகளுக்கு உணவு பொருட்களை கொடுப்பது உள்ளிட்ட வசதிகளை செய்துள்ளனர். இதுஒருபுறமிருக்க ரயிலின் முன் பகுதியில் தெற்கு ரயில்வே இலட்சினைகள் எதுவும் இல்லாமல் TN 43 என்ற தனியார் நிறுவனத்தின் பெயரில் இந்த ரயில் இயக்கப்படுகிறது.

மேலும் ரயிலின் முன்புற பகுதியும் காவி வண்ணத்தில் மாற்றப்பட்டு உள்ளது. மேலும் வழக்கமாக இயக்கப்படும் மலைரயில் இதுவரை சேவை இதுவரை துவங்காத நிலையில், சிறப்பு கட்டண ரயில் சேவை மட்டும் சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து இருக்கிறது. கட்டண ரயிலை மொத்தமாக தனியாருக்கு வாடகைக்கு விடுவதன் மூலம், சிறப்பு கட்டண ரயில் கொண்டு வரப்பட்டு இருப்பதன் நோக்கத்தை சிதைப்பதுடன், தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாக மேட்டுப்பாளையம் உதகை ரயில் பாதை தாரைவார்க்கப்பட்டு உள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக ரயில்வே துறை உதகை சிறப்பு மலை ரயிலை தனியாரிடம் தாரை வார்க்கும் முடிவை கைவிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க