October 29, 2020
தண்டோரா குழு
கோவையில் அ.தி.மு.க சார்பாக பல்வேறு இடங்களில் தி.மு.க.வை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 27-ஆம் தேதி கோவையில் தி.மு.க சார்பாக அதன் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.தலைவரை போஸ்டர் அடித்து அவதூறு பரப்புவதாக கூறி அ.தி.மு.க.வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், திமுகவினர் அரசு மீது களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் பேசி தொடர்ந்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி ,அ.தி.மு.க.மீது அவதூறு பரப்புவதாக,திமுகவை கண்டித்து கோவையில் மாநகர்,மற்றும் புறநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பாக பல்வேறு இடங்களில் கருப்புச்சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக புற நகர் வடக்கு மாவட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சின்னவேடம்பட்டி அண்ணா நகர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில விவசாய அணி துணை தலைவர் சின்னவேடம்பட்டி டியூகாஸ் சுப்பையன் தலைமையில் நடைபெற்ற இதில் தி.மு.க.வை கண்டித்து கண்டன கோசங்கள் எழுப்பபட்டது.இதே போல பீளமேடு பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருப்பு சட்டை அணிந்த கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு தி.மு.க.வை கண்டித்து கோசங்கள் எழுப்பினர்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர் எஸ் பி வேலுமணி ஆகியோர் பற்றி திமுகவினர் தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் பேசி வருவதால் இதனை கண்டிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதாக ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.