October 26, 2020
தண்டோரா குழு
ஆர் எஸ் எஸ் தலைவர் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பிற்கு வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசார் வாகனம் விபத்துக்குள்ளானது.
ஆர் எஸ் எஸ் சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கோவை காருண்யா பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன்பகவத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொள்கின்றனர்.இதனை தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட உள்ளூர் போலீசார் மற்றும் 20க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில் இன்று கோவை விமான நிலையம் வரும் அவருக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.முன்னதாக மோகன்பகவத் தங்கும் இடத்தை பார்வையிட கோவை விமான நிலையத்தில் இருந்து பொலிரோ வாகனத்தில் 7 பேர் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வந்துள்ளனர்.பின்னர் அவருக்கு பாதுகாப்பிற்கு செல்வதற்காக காருண்யாவில் இருந்து விமான நிலையம் நோக்கி சென்றனர். அப்போது பேரூர் பச்சாபாளையம் அருகே வரும்போது முன்னால் சென்ற இருசக்கர வாகன ஓட்டி திடீரென திரும்பியதால் அவர் மீது மோதாமல் இருக்க ஓட்டுனர் இடது பக்கம் திருப்பி உள்ளார் அப்போது அருகில் உள்ள குழியில் இறங்கி பாதுகாப்பு வாகனம் தலைகீழாக கவிழ்ந்தது.இதனை தொடர்ந்து வாகனத்தில் பயணித்த போலீசார் உள்ளே சிக்கிக்கொண்ட நிலையில் அருகில் இருந்த பொதுமக்கள் அவர்களை பத்திரமாக மீட்டனர்.
இந்த விபத்தில் அதிர்ஸ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இதனை தொடர்ந்து மாற்று வாகனத்தில் போலீசார் விமான நிலையம் சென்றனர்.இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.