October 20, 2020
தண்டோரா குழு
மத்திய வங்கக் கடல் பகுதிகளில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாகவும், வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், அடுத்த 24 மணி நேரத்திற்கு, தமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கன மழை பெய்து வருகிறது. மாநகர் பகுதிகளான உக்கடம், டவுன் ஹால், ஆத்துப்பாலம், பந்தய சாலை, ரயில் நிலையம், காந்திபுரம், ராமநாதபுரம், சாய்பாபா காலனி உள்ளிட்ட இடங்களில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக கன மழை பெய்தததால் வெள்ளம் சாலைகளில் சாக்கடைகளில் கலந்து ஆறு போல ஓடுகிறது. அவிநாசி சாலை மேம்பாலத்திற்கு கீழே சாக்கடையோடு சேர்ந்து மழை நீர் தேங்கியதால் போக்குவரத்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல பணிகளில் நடைபெற்று வந்தாலும், ஒரு மணி நேரம் மழை பெய்தாலே, சாக்கடை நீர் சாலைகளில் ஆறை ஓடுவதை தடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.