October 15, 2020
தண்டோரா குழு
காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்புதல் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் வருமான வரி துறை அதிகாரிகள் மற்றும் ஒரு நாள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்
வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி கொண்டிருக்கும் மத்திய நேரடி வருமான ஆணையத்தின் மந்தமான போக்கை கண்டித்து வருமான ஊழியர்கள் சம்மேளனம் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சங்கம் சார்பாக நாடு முழுவதும் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்ஸ் வருமான வரித்துறை அலுவலகத்தில் வருமானவரி அதிகாரிகள் சங்கத்தின் கோவை கிளை தலைவர் ராம்குமார், ஊழியர்கள் சம்மேளனத்தின் தலைவர் ராஜேஸ்வரி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு உள்ளிருப்பு போராட்டத்தில் வருமான வரி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்
இதில் செய்தியாளர்களிடம் பேசிய திரு.ராம்குமார்,
போதிய ஊழியர்கள் இல்லாத நிலையில் ஊழியர்களும் , அதிகாரிகளும் நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைத்து வருவதாகவும்,எனவே காலிப் பணியிடங்களை நிரப்ப மத்திய நேரடி வரி ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்மேலும் ஊழியர்களுக்கும் , அதிகாரிகளுக்கும் உரிய பதவி உயர்வுகளை வழங்க வேண்டும்,என தெரிவித்தார். போராட்டத்தில் அடுத்த கட்டங்களாக துறை சார்ந்த அனைத்து வாட்ஸ் அப் குழுக்களில் இருந்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வெளியேறுதல் பணி பொறுப்புக்களை ஒப்படைத்தல் உயர் அதிகாரிகளால் கூட்டப்படும் துறைசார்ந்த கூட்டங்களில் பங்கேற்காமல் இருத்தல் போன்றவற்றை வருமான துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மேற்கொள்ள போவதும் குறிப்பிடத்தக்கது.