October 8, 2020
தண்டோரா குழு
என்டிசி பஞ்சாலைகளைத் திறக்க வலியுறுத்தி கோவையில் அனைத்து என்டிசி ஆலை வாயில்கள் முன்பு தொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசுக்கு சொந்தமான என்டிசி பஞ்சாலைகள் தமிழகத்தில் கோவை, சிவகங்கை,ராமநாதபுரம் மாவட்டங்களில் 7 பஞ்சாலைகள் உள்ளன.தேசிய பஞ்சாலைக் கழகத்துக்கு சொந்தமாக இந்த ஆலைகளில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஆலைகள் மூடப்பட்டது.ஆலை நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு முழுச்சம்பளமும், தொழிலாளர்களுக்கு பாதி சம்பளம் மட்டுமே கொடுக்கப்பட்டது.அதுவும் தொடர் போராட்டத்தின் விளைவாக கிடைக்கப்பட்டது. தற்போது அதுவும் காலதாமதமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஆலைகளை முழுமையாக இயக்கிட வேண்டும்.தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும்.அதுவரை முழு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதன்ஒருபகுதியாக தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனைத்து பஞ்சாலை தொழிற்சங்க கூட்டமைப்பு முடிவெடுத்திருந்தது.இதற்கு அனுமதி கிடைக்காத நிலையில் வியாழனன்று அனைத்து என்டிசி பஞ்சாலைகளின் முன்பு தொழிலாளர்கள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை பங்கஜமில் ஆலை முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சிஐடியு மில் தொழிலாளர் சங்கத்தின் ராஜேந்திரன் உள்ளிட்ட தலைவர்கள் தலைமை தாங்கினர்.இதேபோன்று கோவையில் உள்ள முருகன் மில்,சிஎஸ்டபுள்யு மில், கம்போடியா உள்ளிட்ட ஐந்து பஞ்சாலைகளிலும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எச்எம்எஸ்,எல்பிஎஃப், சிஐடியு, ஐஎன்டியூசி,எம்எல்எஃப், ஏஐடியுசி உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் தலைவர்கள், தொழிலாளர்கள் திராளாக இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.