October 5, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டம் வடவளளி அருகே உள்ள ஏழாம் படை வீடு என்று அழைக்கப்படும் மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் இருந்து ஸ்கார்பியோ வாகனத்தில் 3 பெண்கள் உட்பட எட்டு நபர்கள் வந்து உள்ளனர்.
மதியம் 12 மணியளவில் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பும் பொழுது மலைப்பகுதியில் உள்ள இடும்பன் சன்னிதி கீழே ஒன்பதாவது வளைவில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு சுவர் மற்றும் மரத்தின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். காயமடைந்த நபரை 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
மருதமலை கோவில் செல்லும் மலைப் பகுதியில் வாகன விபத்து நடப்பது அதிகரித்துள்ளதால் மலைப் பகுதிகளுக்கு செல்லும் தனியார் வாகனங்களில் வாகன ஓட்டிகளின் லைசென்சை அடிவாரப் பகுதியில் ஆய்வு செய்து மேலே அனுப்ப வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.