September 30, 2020
தண்டோரா குழு
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி இடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பாஜகவின் மூத்த தலைவர்கள் உட்பட 49 பேர் மீது சி.பி.ஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் 17 பேர் இறந்து விட்டதால், மீதி 32 பேர் மீது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.இந்தநிலையில் இன்று இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
இதையடுத்து,கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மாநகர காவல் ஆணையாளர் சுமித் சரண் உத்தரவின்பேரில் மாநகர எல்லையில் 935 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதேபோல கோவை ரயில் நிலையம் மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசாரும், சிஆர்பிஎஃப் போலீசாரும் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுளள்னர்.