August 5, 2020
தண்டோரா குழு
ராமர் கோயிலுக்காக பல தலைமுறைகள் தியாகங்கள் செய்துள்ளன என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
அயோத்தியில் இன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய பின் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
ஜெய்ஸ்ரீராம் முழக்கம் இன்று நாடு முழுவதும் கேட்கிறது; உலகம் முழுவதும் உள்ள ராம் பக்தர்களுக்கு வாழ்த்துகள்! அயோத்தி வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது; பல்வேறு தடைகளை தாண்டி இன்று ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.இந்தியாவில் புதிய வரலாறு இன்று எழுதப்பட்டுள்ளது. நமது கலாச்சாரத்தின் சமகால அடையாளமாக ராமர் கோயில் இருக்கும்.நெகழ்ச்சியுடன் மக்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.
தமிழில் கம்ப ராமாயணம் உள்ளிட்ட பல மொழிகளில் ராமாயணங்கள் உள்ளன. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு ராமர் கோயிலும் உதாரணமாகத் திகழும்.கடமையே முக்கியம் என கற்பித்தவர் ராமர்; ராமர் அனைவருக்கும் பொதுவானவர்; தாய்லாந்து, கம்போடியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் ராமர் வழிபாடு உள்ளது. கடவுள் ராமரை விட சிறந்த அரசர் யாருமில்லை.கன்னியாகுமரி முதல் க்ஷிர்பவானி வரை, கோடேஷ்வர் முதல் காமக்யா வரை, ஜெகந்நாத் முதல் கேதார்நாத் வரை, சோம்நாத் முதல் காசி விஸ்வநாத் வரை இன்று முழு நாடும் ராமரில் மூழ்கியுள்ளது.
ராமர் கோயிலுக்கான பணிகளை முடிக்கும் வரை ஓய்வே கிடையாது; இது நடக்கும் என கோடிக்கணக்கான இந்தியர்கள் நினைக்கவில்லை.
சுதந்திரத்திற்கு போராடியது போல், ராமர் கோயிலுக்காக லட்சக்கணக்கானோர் போராடினர்; ராம்ஜென்ம பூமிக்கு இன்று விடுதலை கிடைத்துள்ளது. ஒவ்வொரு நாளும் நமக்கு உந்து சக்தியாக ராமர் இருக்கிறார்; பிரமாண்டமான கோயிலுக்கு இன்று பூமி பூஜை நடைபெற்றுள்ளது. காந்தியடிகளின் சுதந்திர போராட்டத்திற்கு பின்தங்கிய மக்கள் உதவினர்; ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கும் பின்தங்கிய மக்கள் உதவுகின்றனர்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.