July 31, 2020
தண்டோரா குழு
கோவையில் தனி ஒருவனாக போராடி மருத்துவ சிகிச்சையை பெற்ற கூலித்தொழிலாளியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
கோவை சோமனூர் அருகே உள்ள கருக்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம்.கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.கடந்த சனிக்கிழமை அன்று பணியில் இருந்த போது வலது கையில் அடிபட்டு வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார்.
மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் திங்கட் கிழமை வரை கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க இயலாது எனவும், சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். இதனையடுத்து கூலி தொழிலாளி சண்முகம் என்பவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
மேலும்,கொரோனா காரணமாக வேலை இல்லாத காரணத்தினால் தெடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.பேருந்து வசதியும் இல்லை. இதனால் மீண்டும் இன்று சோமனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த கூலித்தொழிலாளி தனக்கு மருத்துவம் பார்க்குமாறு மருத்துவரிடம் கேட்க மருத்துவம் பார்க்க முடியாது என கூறியதோடு தொழிலாளி சண்முகத்தை இழிவாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மனமுடைந்த கூலித்தொழிலாளி சண்முகம் திடீரென சோமனூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். அவரிடம் கருமத்தம்பட்டி காவல் துறையினரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் மறியலை கைவிட்டு,காவல் துறையினர் மூலம் வரவழைக்கப்பட்ட ஆம்புலன்சில் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றார்.தனி ஒருவனாக போராடி மருத்துவ சிகிச்சையை பெற்ற கூலித்தொழிலாளியை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.