July 15, 2020
தண்டோரா குழு
கோவையில் அறிகுறிகள் இல்லாமல் நோய்த் தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்கு இன்று முதல் சித்த மருத்துவ முறைப்படி சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கொரோனா நோய்த் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. கோவையில் இதுவரை 1,500க்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அறிகுறிகள் இல்லாமல் கொரோனா உறுதி செய்யப்படுபவர்கள் கொரோனா கண்காணிப்பு மையத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் புதிய முயற்சியாக நாளை முதல் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.சென்னையில் சித்த மருத்துவ சிகிச்சை முறையில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் குணமடைந்துள்ள நிலையில் கோவையிலும் இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
சித்த மருத்துவம் மேற்கொள்ள விருப்பமுள்ள 25 நோயாளிகளை தேர்வு செய்து முற்றிலும் சித்த மருந்துகளை மட்டுமே பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.இதற்காக கொடிசியா வளாகத்தில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.