July 10, 2020
தண்டோரா குழு
கோவை விமான நிலையத்தில் உள்நாட்டு விமான பயணிகளுக்கான கோவிட் -19 பரிசோதனை கடந்த இரு நாட்களாக நிறுத்து வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணிகளும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.சோதனை முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அவர்கள் ஹோட்டல்களிலோ அல்லது அரசு பள்ளிகள் போன்ற இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது, உள்நாட்டு பயணிகளுக்கான கொரோனா வைரஸ் சோதனைகள் தற்சமயம் நிறுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.பயணிகள் விமான நிலையத்தில் இறங்கியவுடன் பயணிகளின் விவரங்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் சேகரித்து மேலும் பயணிகளின் கையில் ஒரு முத்திரையை வைத்து, பயணிகள் தங்களை தாங்களே வீடுகளில் தனிமைப்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதனையடுத்து பயணிகள் சுகாதாரத்துறையின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வோம் என சுய அறிவிப்பு படிவத்தில் கையெழுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் பயணிகள் தங்களுக்கு கொரோனா தொற்றின் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகளை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து ஒவ்வொரு நாளும் 500 க்கும் மேற்பட்டோர் விமானம் மூலம் கோவைக்கு வருகிறார்கள். தற்காலிகமாக கொரோனா பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளதால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கோவை மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.