July 9, 2020
தண்டோரா குழு
நீலகிரியில் அமையவுள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதல்வர் பழனிசாமி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு குழந்தைகள் பிரிவு, கர்ப்பிணிகள் சிகிச்சை, எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு என மொத்தம் 18 பிரிவுகள் உள்ளன. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி உள்ளது. தினமும் 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள்.
மலைப்பாதைகளில் ஏற்படும் விபத்துகளில் படுகாயம் அடைந்தவர்கள், வனவிலங்குகள் தாக்குதலால் படுகாயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகின்றனர். எனினும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஆனால் ஊட்டியில் இருந்து கோவைக்கு செல்ல 3 மணி நேரம் ஆகிறது. எனவே ஊட்டியில் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இதற்கிடையில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் மருத்துவ கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து நீலகிரியில் மருத்துவக் கல்லூரி அமைபதற்காக 40 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் மருத்துவ கல்லூரி கட்டுவதற்கான டெண்டர் விடும் பணியும் முடிந்தது.
இந்நிலையில், நீலகிரியில் அமையவுள்ள புதிய மருத்துவக் கல்லூரிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்.