July 6, 2020
தண்டோரா குழு
கோவை சரக காவல்துறையின் புதிய துணை தலைவராக நரேந்திரன் நாயர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கோவை சரக காவல்துறையின் துணை தலைவராக கார்த்திகேயன் பணியாற்றி வந்த நிலையில், கடந்த வாரம் அவர் திருப்பூர் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து,கோவை சரக காவல்துறையின் துணை தலைவராக (டி.ஐ.ஜி) சென்னையில் பணியாற்றி வந்த நரேந்திரன் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், இன்று 10 மணியளவில் கோப்புகளில் கையொப்பமிட்டு புதிய டி.ஐ.ஜி., யாக நரேந்திரன் நாயர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை சரகத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்த அனைத்து வகையான நடவடிக்கையும் எடுக்கப்படும்.
பொதுமக்கள் தங்களது குறைகளை எந்தநேரத்திலும் என்னைத் தொடர்புகொண்டு தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறையினர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் நலன் மீது சிறப்பு அக்கறை செலுத்தப்படும். தவறு செய்யும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.