July 2, 2020
தண்டோரா குழு
கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறவந்த இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கோவை சுந்திராபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த கோவை சுந்திராபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த இளைஞருக்கு கோவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து. மாநகராட்சி சுகாதாரதுறையினர், மருத்துவமனைக்கு சீல் வைத்து, மருத்துவமனை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தடுப்புகள் அமைத்துள்ளார்கள். மேலும் அப்பகுதியில் வாகனம் மூலம் ஒலிபெருக்கி வாயிலாக விழிப்புணர்வு எச்சரிக்கை செய்து வருகிறார்கள்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கும்போது,
சம்பந்தப்பட்ட நபர் சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்ததாகவும் அவரை உடனடியாக கோவிட்-19 பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதால் கோவையில் உள்ள தனியார் மருத்துவபரிசோதனை கூடத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதால் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் இந்த மருத்துவமனையில் அவருக்கு எந்தவித சிகிச்சையும் மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும் பொதுமக்கள் நலன் கருதியும் நோய்த்தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாகவும், மருத்துவமனை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு தற்காலிகமாக மருத்துவமனை மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்கள்.