July 1, 2020
தண்டோரா குழு
கோவை மாநகரில் கொரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை கண்காணிக்க போலீஸாருக்கு சிறப்பு வாகனங்களை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் துவங்கி வைத்தார்.
கோவையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை , மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகம், போலீஸார் தொடர்ந்து போராடி வருகிறது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடு உள்ள பகுதிகள், பணியிடங்களை தனிமைபடுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கு போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனிமைபடுத்தப்பட்ட பகுதிகளில் பணியாற்றும் காவலர்கள் கட்டாயமாக முகக்கவசம், கண்ணாடி, கையுறைகள் அணிய வேண்டும் என மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் மாநகர் முழுவதும் கொரோனாவால் தனிமைபடுத்தப்பட்ட இடங்களை கண்காணிக்க சிறப்பு குழு மற்றும் ரோந்து செல்ல சிறப்பு வாகனங்களை மாநகர போலீஸ் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தெற்கு மண்டல காவல் எல்லைகளுக்குள் ரோந்து செல்லும் வாகனத்தை காவல் ஆணையர் சுமித் சரண் துவங்கி வைத்தார். இதில் துணை அணையர் பாலாஜி சரவணன், உதவி ஆணையர் செட்ரிக் மனுவேல், ஆய்வாளர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போல் மாநகரம் முழுவதும் ரோந்து வாகனங்கள் இன்று முதல் செயல்பட உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.