June 21, 2020
தண்டோரா குழு
சென்னையில் இருந்து இபாஸ் பெற்று கோவை வந்த தனியார் நிறுவன பெண் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அவர் வசித்த பீளமேடு தனியார் அடுக்கு மாடி குடியிருப்பிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
கோவை பீளமேடு துரைசாமி லே அவுட் அருகே உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிருப்பை சேர்ந்த பெண் ஒருவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் இபாஸ் பெற்று கோவையில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். சென்னையில் இருந்து வந்ததால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆம்புலென்ஸ் மூலம் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது வீட்டில் இருந்தவர்களையும் தனிமைபடுத்தினர்.
மேலும் பெண் தங்கி இருந்த அடுக்கு மாடி குடியிருப்பிற்கு மாநகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினிகள் தெளித்தனர். யாரும் வெளியே செல்லாதவாறு குடியிருப்பிற்கு சீல் வைத்தனர்.