June 13, 2020
தண்டோரா குழு
மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் அனைத்திற்கு விடுமுறை வழங்கப்பட்டு அலுவலகங்கள் சுத்தப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தூய்மைபடுத்தும் பணி இன்று நடைபெற்றது.
கொரோனா நோய் தொற்று காரணமாக நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் இயங்க ஆரம்பித்துள்ளன. இவ்வாறு இயங்கும் அரசு அலுவலகங்களில் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக கடந்த வாரம் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி , இன்று அனைத்து அரசு அலுவலகங்களையும் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளையும் சுத்தப்படுத்தும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.அனைத்து அறைகளையும் தூய்மைப்படுத்திய பின்னர், கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. அறைகளின் கதவுகள், ஜன்னல்கள், இருக்கைகள் மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்த பணியில் சுமார் 10 தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர்.