June 10, 2020
தண்டோரா குழு
கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் செயல்பட்டுவரும் வாரச்சந்தைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோவை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் செயல்பட்டுவரும் வாரச்சந்தைகளில்
பொதுமக்கள் போதிய சமூக இடைவெளியினை கடைபிடிக்காமல் கூட்ட நெரிசல்கள்
மிகுந்து காணப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வரப்பெற்று வருகிறது. இதனடிப்படையில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர்
ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப., உத்தரவின்படி,மாநகராட்சிப்பகுதிகளில் செயல்பட்டுவரும் வாரச்சந்தைகள் போதிய சமூக இடைவெளியினை பின்பற்றாத காரணத்தினாலும், கொரானா வைரஸ் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாலும், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டும் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் வாரச்சந்தைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள் அனைரும் வீட்டை விட்டு வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களுக்கு ரூ.100 அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் கூடும் மக்கள் போதிய சமூக இடைவெளியினை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் திரு.ஷ்ரவன்குமார் ஜடாவத் இ.ஆ.ப.,தெரிவித்துள்ளார்கள்.