June 10, 2020
தண்டோரா குழு
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 5-ம் கட்ட பொது ஊரடங்கு ஜூன் 30-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகள் இயங்க கடந்த ஜீன் 1 ஆம் தேதி முதல் அனுமதி அளிக்கப்பட்டது.
கோவை திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், சேலம் நாமக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்திற்குள் மட்டும் தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 77 நாட்களுக்கு பிறகு இன்றிலிருந்து தமிழகம் முழுவதுமுள்ள தனியார் பேருந்துகள் இயக்கபடுகிறது. இதில் கோவையில் மட்டும் 150 பேருந்துகள் இயக்கப்படுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டும், முகக்கவசம், கையுறைகள், கிருமி நாசினி திரவம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு பாதுகாப்போடு இயக்கப்படுவதாக தெரிவித்தனர்.மக்களின் கூட்டம் குறைவாக இருப்பதால், அரசு பேருந்துகள் குறைக்கப்பட்டு இருந்த நிலையில் , இன்று முதல் தனியார் பேருந்துகள் ஓடத்துவங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.