June 2, 2020
தண்டோரா குழு
வியாபாரம் நடத்தாமல் வாழ்வாதாரம் முடங்கி கிடப்பதாகவும், மாநகராட்சி கொடுக்கும் கட்டுப்பாடுகளை பின்பற்றி வியாபாரம் செய்யப்படும் என்றும், தொழில் நடத்த அனுமதி வேண்டும் என்றும் கோரி கோவை டி.கே மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை பெரியகடை வீதி பகுதியில் தியாகி குமரன் மார்க்கட் கடந்த 1930ம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் 450 கடைகள் உள்ளன. கொரோனா ஊரடங்கால் இதில் 50 கடைகள் மட்டுமே திறக்க மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் மற்ற வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர். அனைத்து கடைகளை திறக்க அனுமதி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று மற்றும் நாளை முழு அடைப்பு போராட்டம் நடத்துவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து டி.கே மார்க்கெட் அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
“கடந்த 65 நாட்களாக எங்கள் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறோம்.இந்த சூழலில் 50 கடைகள் மட்டும் திறந்தால் எங்கள் ஒற்றுமை சீர்குலையும். இங்குள்ள அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி கொடுக்க வேண்டும். மாநகராட்சி கொடுடுக்கும் அனைத்து விதிமுறைகளையும் முறையாக கடைபிடித்து தொழில் நடத்துவோம். எங்களை தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும்.” இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.