June 1, 2020
தண்டோரா குழு
கொரோனாவின் தாக்குதலில் இருந்து, கோவை ஏறக்குறைய மீண்டு விட்டதின் முக்கிய அறிகுறியாக, இன்று முதல் பஸ் போக்குவரத்து துவங்கியது.
தமிழகத்தில் ஜூன், 30ம் தேதி வரை பல தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக,இன்று முதல், 50 சதவீத பஸ்கள், 60 சதவீத பயணிகளுடன் இயக்கப்படுகின்றன.எட்டு மண்டலங்களாக, பஸ் போக்குவரத்து நடைமுறைப்படுத்தப்படுகிறது.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள், ஒன்றாவது மண்டலத்தில் இடம்பெற்றுள்ளன. மண்டலங்களுக்கு இடையே, பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கோவை கோட்டத்துக்கு உட்பட்ட கோவையில், 539 பஸ்கள், திருப்பூரில், 280, ஈரோட்டில், 334, நீலகிரியில், 173 என, 1,326 பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. ‘மாஸ்க்’ அணிந்த பயணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும், சமூக இடைவெளி அவசியம் என்பன உள்ளிட்ட, அரசின் வழிகாட்டு நடைமுறைகளை, கண்டிப்பாக பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்ட நிர்வாக இயக்குனர் அன்பு ஆபிரகாம் கூறியதாவது:
31 பயணிகளுடன் வெளியூர் பஸ்களும், 22 பயணிகளுடன் உள்ளூர் பஸ்களும் இயக்கப்படவுள்ளன. டிரைவர், கண்டக்டர்களுக்கு பரிசோதனை செய்வதுடன், மாஸ்க், கிளவுஸ் அணிவதும் கட்டாயமாக்கப் பட்டுள்ளது. பயணிகளுக்கு சானிடைசர் தெளிக்க, வெப்ப நிலையை சோதனை செய்ய, தனி நபர் நியமிக்கப்பட்டுள்ளார். பஸ் ஸ்டாண்ட்களிலும், ஸ்டாப்களிலும் பஸ்களின் உள்ளே, கிருமி நாசினி தெளிக்கப்படும்.பஸ் டிப்போக்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பிறகே, பஸ்கள் வெளியே வரும். இன்று பஸ்கள் இயக்கப்பட்ட பிறகு, பயணிகளுக்கு ஏற்ப பஸ்களை அதிகரிப்பது, குறைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.