May 26, 2020
தண்டோரா குழு
கோவையில் வடமாநில தொழிலாளி ஒருவர் பணிபுரியும் தொழிற்சாலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் அடுத்த எல்.ஜி இன்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில் கனரக வாகனங்களுக்கான உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யும் சாய்க்கார்ப் இன்டஸ்ட்ரியல் டிரைலர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தில் ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அசோக் பெக்ரா (32) என்பர் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு ஒரிசா மாநிலத்தில் மனைவி மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளால் தொழிற்சாலை மூடப்பட்டிருந்த நிலையில் வேலை இல்லாமல் தொழிற்சாலையிலேயே கடந்த இரண்டு மாதங்களாக அசோக் பெக்ரா தனியாக தங்கி இருந்துள்ளார்.அசோக் பெக்ரா சொந்த ஊருக்குச் செல்ல பல முறை முயற்சித்ததாக முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து அசோக் பெக்ரா உடன் ஒரு பணியாளர் என இரண்டு பேர் மட்டுமே இத்தொழில் சாலையில் பணியில் இருந்து வந்ததாக தெரிகிறது.இந்த நிலையில் இன்று காலை சக பணியாளர் தொழிற்சாலையை திறந்த போது அசோக் பெக்ரா கிரைன் இயந்திரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிங்காநல்லூர் காவல்துறையினர் அசோக் பெக்ராவின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அசோக் பெக்ரா தனது சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலையில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.