May 22, 2020
தண்டோரா குழு
கோவையில் நாட்டு வெடிகுண்டு வீசி காட்டுப்பன்றி வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்தில் யானை,காட்டெருமை,மான் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அக்னி வெயிலால் வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகிறது.இதனால் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத்தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து விடுகின்றன. அவ்வாறு ஊருக்குள் புகுந்து விடும் வனவிலங்குகளை துன்புறுத்தவோ, வேட்டையாடவோ கூடாது.அது சட்டப்படி குற்றம். அவ்வாறு குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது வன உயிரின பாதுகாப்புச்சட்டத்தின் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை கடுமையாக எச்சரித்து வருகிறது.அதனையும் மீறி சிலர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட கட்டாஞ்சி மலைப்பகுதியில் சிலர் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் படி பெரிய நாயக்கன்பாளையம் வனச்சரகர் சுரேஷ் தலைமையிலான வனத்துறையினர் கட்டாஞ்சி மலைப்பகுதியில் தீவிர ரோந்து ஈடுபட்டனர்.
அப்போது,கட்டாஞ்சி மலைப்பகுதியில் ஒரு கும்பல் அவுட் காய் எனப்படும் நாட்டு வெடிகுண்டு வீசி காட்டுப்பன்றியை கொன்று கறியை கூறு போட்டுக்கொண்டிருந்ததது. வனத்துறையினரை கண்ட கும்பல் தப்பியோட முயற்சித்தது.சுற்றி வளைத்து பிடித்த வனத்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் காரமடையை அடுத்த பெட்டதாபுரத்தை சேர்ந்த மாரிமுத்து, திருமலை நாயக்கன்பாளையதமை சேர்ந்த ஆறுமுகம், கணவாய்பாளையத்தை சேர்ந்த பாலமுருகன் என்பதும், நாட்டு வெடிகுண்டு வீசி காட்டுப்பன்றியை கொன்றதும் தெரிய வந்தது.
இதனையடுத்து மூவரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து 7 கிலோ காட்டுப்பன்றி இறைச்சி மற்றும் 6 நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்தனர்.பின்னர், அவர்களை மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஊரடங்கு நேரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி காட்டுப்பன்றியை வேட்டையாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.