May 18, 2020
தண்டோரா குழு
ஊரகப்பகுதிகளில் உள்ள சலூன் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் சலூன்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதற்கிடையில் தமிழகத்தை பொறுத்தவரையில் பொதுமுடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் தற்போது ஊரகப்பகுதிகளில் உள்ள சலூன் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் தாக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. நோய்த் தொற்று குறைய குறைய தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, தற்போது, முடி திருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதி, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் தவிர ஏனைய ஊரக பகுதிகளில் முடி திருத்தும் நிலையங்கள் 19.5.2020 அன்று முதல் இயங்குவதற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த முடிதிருத்தும் நிலையங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியினை பின்பற்றுமாறும், கையுறை அணிந்து முடி திருத்துமாறும், முககவசங்கள் அணிவதை உறுதி செய்யுமாறும், கடையின் உரிமையாளர் முடி திருத்தும் நிலையங்களில் ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினியை தெளிக்குமாறும், அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், இதற்கான விரிவான வழிமுறைகளை அரசு தனியாக வழங்கும் எனக் கூறியுள்ளார்.