May 13, 2020
தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 145 பேரும் குணமடைந்தனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கோவையை பொறுத்த வரையில் 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் ஏற்கனவே 141 குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கிடையில், நேற்று ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, குழந்தை உட்பட மூன்று பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.இதையடுத்து,கோவையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்தது.
எனினும், கரும்புகடையை சேர்ந்த பெண் ஒருவர் மட்டுமே தற்போது பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தார்.இவருக்கு,கடந்த மூன்று தினங்களுக்கு முன் சிசேரியன் முறையில் ஆண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தில், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.எனினும் பரிசோதனை முடிவில் தொற்று இல்லை,என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில்,கொரோனா தொற்றால் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த கர்ப்பிணி பெண்ணும் இன்று குணமடைந்து இன்று வீடு திரும்பினார். இதன் மூலம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக கோவை அறிவிக்கப்பட்டுள்ளது.