May 12, 2020
தண்டோரா குழு
கோவையில் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, மூவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கோவையை பொறுத்த வரையில் 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.இதில் ஏற்கனவே 141 குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்நிலையில், கோவை, வெங்கிட்டாபுரத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, குழந்தை உட்பட மூன்று பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.இ.எஸ்.ஐ.,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளித்து வந்தனர்.பூரண குணமடைந்த அவர்கள் இன்று வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதன்மூலம்,கோவையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 144 ஆக உயர்ந்துள்ளது.
கரும்புகடையை சேர்ந்த பெண் ஒருவர் மட்டுமே
தற்போது பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்.இவருக்கு,கடந்த மூன்று தினங்களுக்கு முன் சிசேரியன் முறையில் ஆண் குழந்தை பிறந்தது.குழந்தைக்கு தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தில், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.எனினும் பரிசோதனை முடிவில் தொற்று இல்லை, என உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 114 பேர் கோவை இ.எஸ்.ஐ.,மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். அதில், 55 பேரின் பரிசோதனை முடிவுகள்
பெறப்படவில்லை,58 பேருக்கு தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.