May 11, 2020
தண்டோரா குழு
நடிகர் விஜய் சேதுபதி பற்றி பேசிய கருத்துகளை அகற்றவும்,வலைதளத்தில் சிலர் பரப்பிய அந்த வீடியோவை நீக்க கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் அவரது ரசிகர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
நடிகர் விஜய் சேதுபதி ரசிகரான கோவை பொன்னையராஜபுரம் பகுதியில் வசிக்கும் கோகுல் என்பவர் விஜய் சேதுபதி ரசிகர்கள் நற்பணி இயக்கத்தினருடன் இணைந்து கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.அந்த புகாரில், நடிகர் விஜய்சேதுபதி கடந்த ஆண்டு தனியார் தொலைகாட்சியில் ’நம்ம ஊரு ஹீரோ’ என்ற நிகழ்ச்சியில் மறைந்த நடிகர் கிரேஸி மோகன் மேடையில் பேசிய நகைச்சுவை வசனம் ஒன்றை பேசியிருந்தார்.
இந்நிலையில் வசனத்தை முற்றிலுமாக மாற்றி இந்துக்களுக்கு எதிராக பேசியது போல் அந்த காணொளியை எடிட் செய்து சமூக வலைதளத்தில் சிலர் பரப்பி உள்ளனர்.
இதனால் சமூக வலைதளங்களில் இந்து ஆதரவாளர்கள் சிலர் விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசி வருகின்றனர். மேலும் இதன் மூலம் விஜய் சேதுபதியின் நற்பெயரை கெடுக்கும் விதத்திலும்,சமுதாய அமைதியை சீர்குலைக்கும் விதத்தில் உள்ளதாக கூறியுள்ளார்.நடிகர் விஜய் சேதுபதி இந்து மத மாண்புகளையும்,மத கோட்பாடுகளையும் எந்த வகையிலும் மீறாமல் நடந்து கொள்பவர் என்றும் எனவே உடனடியாக விஜய் சேதுபதி பற்றி பேசிய கருத்துகளை அகற்றவும், விஷமிகள் சிலர் பரப்பிய அந்த வீடியோவை நீக்க கோரி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகார் மனுவை அளிக்கும் போது அவருடன் கோவை மாவட்ட விஜய் சேதுபதி நற்பணி இயக்கத்தின் மாவட்ட தலைவர் விக்னேஷ் அன்பழகன்,மற்றும் சட்ட ஆலோசகர் அருள் சக்தி உடனிருந்தனர்.