April 26, 2020
தண்டோரா குழு
கோவையில் கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு காரணமாக பேஸ்புக்கில் லைவ் – காவல்துறையினர், ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கி தங்களது திருமணத்தை காதல் ஜோடி வித்தியாசமாக நடத்தினர்.
கொரோனா வைரஸ்சால் ஏற்பட்ட ஊராட்டு உத்தரவு காரணமாக மக்கள் கடந்த ஒரு மாதமாகவே அத்தியாவசியத் தேவைக்கு மட்டுமே வெளியே வருகின்றனர். மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள்,காவல்துறையினர் உள்ளிட்ட முக்கியத் துறைகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பணிகளைத் தொடர்ந்து வருகின்றனர். ஐ.டி உள்ளிட்ட ஒரு சிலர் மட்டும் வீட்டில் இருந்தபடியே பணிகளைச் செய்து வருகின்றனர். வெளியே வரும் மக்களும் தனி மனித இடைவெளியை கடைப்பிடிப்பது,முகக்கவசம் மற்றும் கையுறை அணிவது என பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் அரசு அறிவித்துள்ளப்படி திருமணம்,இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே கலந்துகொள்கிறார்கள். அப்படி திருமணம் என்றால் பல்வேறு விதிமுறைகளை அரசு கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக பிரமாண்டமாக முறையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சில திருமணங்கள் தமிழகத்தில் மிகவும் எளிமையான முறையில் நடந்து வருகின்றன. சிலர் தங்களது திருமணத்தைத் தள்ளி வைத்துள்ளனர்.
இந்நிலையில்,கோவை துடியலூர் அடுத்துள்ள குருடம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த விக்னேஷ் பாபு மற்றும் பிரவினா ஆகியோர் இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் இன்று காலை 26ம் தேதி திருமணம் விநாயகர் கோவிலில் திருமணம் செய்து பேஸ்புக்கில் லைவ் செய்து உறவினர்கள், நண்பர்களுக்கு சேர் செய்தார். தொடர்ந்து காவல்துறையினர், ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்தார்.
விக்னேஷ் பாபு கோவையில் சிவில் இன்ஜினீயராக பணியாற்றி வருகிறார். பிரவினா ஐ.டி கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி துடியலூரில் நிச்சியதார்த்தம் நடைபெற்றது. தொடர்ந்து பத்திரிக்கைகள் அடிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்கள் என சுமார் 2500 மக்களை அழைத்து திருமணம் நடத்த திட்டமிட்டு இருந்தனர். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு வந்துள்ள நிலையில் தங்களது திருமணத்தை ஊரடங்கு உத்தரவுக்கு ஏற்றாற்போல பல்வேறு மாற்றங்களுடன் நடத்த திட்டமிட்டனர். இதற்காக தங்கள் பெற்றோருடன் பேசி முடிவு செய்தனர். அதனைதொடர்ந்து இன்று காலை அருணா நகரிலுள்ள விநாயகர் கோவிலில் திருமணம் எளிமையாக நடைபெற்றது.இதில் உறவினர்கள்,நண்பர்கள் என 25 பேர் கலந்துக்கொண்டனர். மேலும் திருமணத்தை பேஸ்புக்கில் லைவ் செய்து மற்ற அனைவருக்கும் சேர் செய்தனர்.அதேபோல யூடியூப்பில் அப்லோடு செய்து நண்பர்களுக்கு அனுப்பி வைத்தனர்.அதன்பிறகு செய்யப்பட்டு இருந்த காலை உணவை கோவை வடமதுரை அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினருக்கு மணப்கோலத்திலேயே சென்று வழங்கினர். தொடர்ந்து துடியலூர், கவுண்டர்மில்ஸ், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் சென்று வழங்கினர்.
இதுகுறித்து விக்னேஷ் பாபு கூறுகையில்,
“எனக்கும்,கோவை டைடில் பார்க்கில் பணியாற்றி வரும் பிரவீனா என்பவருக்கும் இன்று 26-ம் தேதி பிரமாண்டமான முறையில் திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்தோம்.
கடந்த மார்ச் மாதமே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது.திருமணத்துக்காக மண்டபத்தை புக் செய்து, சுமார் 2,500 பேருக்கு அழைப்பு விடுத்திருந்தோம்.இதனிடையே, கொரோனா வைரஸ் தாக்கத்தால் குறைந்த எண்ணிக்கையிலான மக்களை வைத்துத்தான் திருமணம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.அதில் எங்களுக்கு உடன்பாடில்லை.நம் நாட்டில் இது எப்போது முழுமையாக நீங்கும் என்று தெரியவில்லை. இந்த நிலையில் திருமணத்தை திட்டமிட்டபடி அதே நாளில் நடத்த முடிவு செய்தோம். நண்பர்கள்,உறவினர்கள் பலரும் கலந்துகொள்ள முடியாததால் அவர்களுக்காக, திருமணத்தை ஃபேஸ்புக்கில் லைவ் கொடுத்தோம். மேலும், யூடியூபிலும் திருமண வீடியோவை அப்லோட் செய்து உள்ளேம்.இன்று காலை 26ம் தேதி திருமணம் முடிந்தவுடன் கொரோனா பணியில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் காவல்துறையினர் மற்றும் குருடம்பாளையம் ஊராட்சி முழுவதும் ஆதரவற்ற மற்றும் ஏழை எளிய மக்கள் 2,500 பேருக்கு நேரடியாக சென்று உணவு கொடுத்தோம்.இதன் மூலம்,நாங்கள் ஏற்கெனவே திட்டமிட்டதைவிட அதிகப்படியான மக்களின் ஆசிர்வாதம் எங்களுக்கு கிடைத்தது.அதில் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி” என்றார்.