April 20, 2020
தண்டோரா குழு
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய இடம் தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு ஆளான, 55 வயது மதிக்கத்தக்க நரம்பியல் நிபுணர் சென்னை தனியார் மருத்துவமனையில் நேற்று மரணமடைந்தார். அவரது உடல் கீழ்ப்பாக்கம் மாயனத்தில் அடக்கம் செய்ய இன்று காலை எடுத்து செல்லப்பட்டது.ஆனால், கொரோனாவுக்கு பலியான மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அண்ணாநகர் பகுதியிலும் இந்த எதிர்ப்பு பரவியதையடுத்து இதுதொடர்பாக 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு ஆளாகி இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய தான் இடம் தருவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,
கொரோனாவால் உயிரிழந்தவர்கள் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரி வளாகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.உடலை அடக்கம் செய்வதால் எந்த பாதிப்பும் இல்லை என்பதை அரசு புரிய வைக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.