April 18, 2020
தண்டோரா குழு
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் அனுமதிக்கப்பட்டிருந்த 23 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர். அவர்களை மாவட்ட ஆட்சியர் ராசாமணி வீட்டிற்கு வழியனுப்பி வைத்தார்.
உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை லட்சக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1,372 பேர் வரை வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 15 பேர் பலியாகியுள்ளனர்.கோவையை பொறுத்த வரையில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மட்டும் கோவை திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 280 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சூழலில்,கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் கோவையை சேர்ந்த 10 பேர், திருப்பூரை சேர்ந்த 9 பேர் மற்றும் நீலகிரியை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 23 பேர் பூரண குணம் அடைந்துள்ளனர். இந்நிலையில்,கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாமணி, இ.எஸ்.ஐ மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா ஆகியோர் அவர்களை வீட்டிற்கு வழியனுப்பி வைத்தனர். முன்னதாக குணமடைந்த அவர்களிடம் நலம் விசாரித்த மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு சிகிச்சை அளித்த செவிலியர்களை வெகுவாக பாராட்டினார்.
பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கோவையில் கொரோனா தடுப்பு பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. தற்போது இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இருந்து 23 பேர் பூரண குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் உடன் தொடர்பில் இருந்ததாக 2025 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் மூன்று பேருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இஎஸ்ஐ மருத்துவமனையை பொறுத்தவரையில் அங்குள்ள மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடனும் பயம் இல்லாமல் தயக்கம் இல்லாமல் பணியாற்றி வருகின்றனர் அவர்களது பணி பாராட்டத்தக்கது.கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அடுத்த பத்து நாட்களில் இந்த மருத்துவமனையில் இருந்து அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இதுவரை இஎஸ்ஐ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று 51 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.