April 17, 2020
தண்டோரா குழு
மத்திய அரசே தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்தை கொடுக்க வேண்டும் எனவும் அது தொழில் அமைப்பினருக்கு உதவியாக இருக்கும் என்று கொடிசியா அமைப்பின் தலைவர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் அனைத்து தொழில்களும் முடங்கி பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் கோவை கொடிசியா வளாகத்தில் அனைத்து தொழில் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கொடிசியா, கோப்மா, டேக்ட், சீமா, டாப்மா,சீயா,சி.ஐ.ஐ,கொசீமா,கோ இண்டியா, பவுண்டரி அசோசியேசன் உட்பட 19 தொழில் அமைப்பினர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின்னர் அனைத்து தொழில் கூட்டமைப்பின் சார்பில் கொடிசியா அமைப்பின் தலைவர் ராமமூர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர்,
லாக்டவுன் நடவடிக்கையினை அனைத்து தொழில் அமைப்புகளும் வரவேற்பதாகவும் கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டவுடன், தொழிலாளர்களை பரிசோதிக்க அரசு நடவடிக்கை வேண்டும். சிறு, குறு தொழில்முனைவோருக்கு இதுவரை எந்த அறிவிப்பும் அரசிடம் இருந்து வரவில்லை.
சிறு, குறு தொழில் முனைவோருக்கு வங்கிகள் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இருந்த பணம் அனைத்தும் வங்கிகளில் இருந்து ஆட்டோ டெபிட் ஆகிவிட்ட நிலையில் சிறு, குறு தொழில் முனைவோரிடம் கையில் பணம் இல்லை என்றார்.
ஏற்கனவே தொழில் நெருக்கடியில் இருக்கும் நிலையில் சில சிறு,குறு தொழில்களுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு சரியான அறிவுறுத்தல்களை ரிசர்வ் வங்கி வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.லாக்டவுன் காலத்திற்கு சிறு, குறு தொழில் முனைவோருக்கு வட்டி விதிக்கக்கூடாது எனவும் கூடுதல் சுமையை தொழில் முனைவோர் மீது வங்கிகள் சுமத்திக்கொண்டே இருக்கின்றனர் எனவும் சுமைகளை வங்கி நிர்வாகங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். 10 லட்சம் கோடி சிறு,குறு தொழில் முனைவோருக்கு மத்திய அரசு ஒதுக்கி கொடுக்க வேண்டும் எனவும் அப்போதுதான் நெருக்கடி நிலைமையில் இருந்து மீள முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஏப்ரல் மாத சம்பளத்தையும் தொழிலாளர்களுக்கு சிறு, குறு தொழில் முனைவோர் கொடுக்க வேண்டும் என பிரதமர் சொல்கின்றார் என கூறிய அவர், தற்போது சம்பளம் கொடுக்கும் அளவிற்கு தங்களுக்கு வசதி இல்லை எனவும் மத்திய அரசே தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்தை கொடுக்க வேண்டும் எனவும் அது தொழில் அமைப்பினருக்கு உதவியாக இருக்கும் எனவும் சட்டத்தில் அதற்கு இடமுண்டு எனவும் தெரிவித்தார்.
கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்படுத்தாமல் தொழில் கூடங்களை நடத்த முடியாது எனவும் தொற்று முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டவுடன் தொழில் கூடங்களை திறக்க சொல்லலாம் எனவும் கூறிய அவர், மனதளவில் தொழில் முனைவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் எனவும் தெரிவித்தார். அடுத்த ஓராண்டு காலத்திற்கு தொழிற்சாலை ஆய்வு, தணிக்கை போன்ற சோதனை வருகைகளை தவிர்க்க வேண்டும் எனவும் சிறு, குறு தொழில் முனைவோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இதுவரை வந்த ஆர்டர்கள் அனைத்தும் கேன்சல் ஆகி வருகின்றது என கூறிய அவர்,ரயில் சேவை துவங்கினால் புலம் பெயர் தொழிலாளர்கள் ஊருக்கு போய் விடுவார்கள் எனவும் அதன் பின்னர் திறன் வாய்ந்த தொழிலாளர்களை இனி தேட வேண்டிய நிலையில் இருக்கின்றோம் எனவும் ராமமூர்த்தி தெரிவித்தார்.
மேலும்,மத்திய அரசிடம் இருந்து அறிவிப்புகள் மட்டுமே வருகின்றது எனவும் அவை முறையாக நடைமுறைப்படுத்துவதில்லை என கூறிய அவர், சிறு,குறு தொழில் முனைவோரின் கோரிக்கைகளை வங்கி நிர்வாகங்கள் ரிசர்வ் வங்கியிடமும் நிதி அமைச்சரிடமும் பேச வேண்டும்.கார்ப்பரேட்டிற்கும்,சிறு,குறு தொழில் முனைவோருக்கும் ஓரே மாதிரியான சட்டதிட்டங்களை வங்கி நிர்வாகம் வைத்திருக்கின்றது என கூறிய அவர், இ.எஸ்.ஐ, பி.எப் போன்றவற்றில் இருக்கும் கையிருப்பு தொகையினை பயன்படுத்தி அனைத்து தொழிலாளர்களுக்கும் மத்திய அரசால் சம்பளம் கொடுக்க முடியும் எனவும் ராமமூர்த்தி தெரிவித்தார்.