April 3, 2020
தண்டோரா குழு
கோவையில் ஊரடங்கு நேரத்தில் விற்பனையாளர்கள் இல்லாமல் ரொட்டி விற்பனை நடைபெறுவதும், பணத்தை பொதுமக்கள் முறையாக வைத்து செல்வதும், ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பேக்கரி, தேநீரகங்கள் உள்ளிட்ட கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மக்கள் அநாவசியமாக ஊர் சுற்றுவதை தவிர்க்கும் வகையில், மளிகை கடைகளுக்கும் நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவையில் பசியோடு இருப்பவர்களுக்கு 24 மணி நேரமும் ரொட்டி கிடைக்க ஒரு பேக்கரி எடுத்துள்ள நூதன முயற்சி மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. கோவை ரத்தினபுரி பகுதியில் விக்னேஷ் என்பவர் நெல்லை முத்து விலாஸ் எனும் விக்னேஸ்வரா ஸ்வீட்ஸ் எனும் கடையை நடத்தி வருகிறார். ஊரடங்கு காலத்தில் மக்களின் பசியாற்ற ரொட்டி கிடைக்க மனிதத்தின் முதற்படி என செல்ப் சர்வீஸ் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அதன்படி அக்கடை முன்பு ரொட்டி பாக்கெட்டுகள் வைக்கப்பட்டு இருக்கும். ஆனால் கடை பணியாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு ரொட்டி பாக்கெட்டின் விலை 30 ரூபாய் எனவும், ரொட்டியை எடுத்துக் கொண்டு பணத்தை அங்குள்ள ஒரு பெட்டியில் வைத்து செல்லவும் எனவும் எழுதி ஒட்டியுள்ளார்.
இதன்படி அப்பகுதி மக்கள் ரொட்டிகளை எடுத்துக்கொண்டு பணத்தை அப்பெட்டியில் வைத்து செல்கின்றனர். இவ்வகையில் நாள் ஒன்றுக்கு 100 முதல் 150 பாக்கெட் ரொட்டி விற்பனையாவதாகவும், எந்நேரத்திலும் மக்களுக்கு ரொட்டி கிடைக்க செய்ய வேண்டுமென்ற நோக்கில் இதனை செய்துள்ளதாகவும் உரிமையாளர் விக்னேஷ் தெரிவித்தார். அனைவரும் ரொட்டியை எடுத்துக் கொண்டு பணத்தை முறையாக வைத்து செல்வதாகவும், இதேபோல உணவின்றி தவிப்பவர்களுக்கு ரொட்டி உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.பணியாளர் இல்லாத கடையும், பணத்தை முறையாக வைத்து செல்லும் மக்களும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.