March 30, 2020
தண்டோரா குழு
கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்க ரயில் பெட்டிகள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக கோவையில் மாற்றப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்க தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக ரயில் பெட்டிகளை மாற்ற ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது. சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க 21 நாள் ஊரடங்கு அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுபோக கொரோனா அறிகுறியுடன் இருக்கும் நபர்களை தனிமைப்படுத்தும் பணியை மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன.
கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களை தனிமை வார்டுகளில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதற்காக அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கட்டாயம், 25 சதவீத படுக்கையுடன் கொரோனா சிகிச்சைக்கான வார்டு தயாராக இருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில், ஒவ்வொரு தனியார் மருத்துவமனைகளும், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ், கிராமப்புற மக்களை கடுமையாக பாதித்தால், எந்த வகையில் கட்டுக்குள் கொண்டு வருவது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
இதில், அனைத்து அரசு துறைகளும் கிராமப்புற மக்களுக்கு கொரோனா தடுப்பு மருத்துவ சேவையாற்ற இயன்ற உதவியை செய்ய வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதன்பேரில் மத்திய ரயில்வேத்துறை, கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மருத்துவ சேவைக்கான முன்னேற்பாடுகளை செய்ய தீவிரம் காட்டியுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், ரயில்வே துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில், ரயில் பெட்டி மற்றும் இன்ஜின் பராமரிப்பு மையங்களில் (ரயில்வே பட்டறை) கொரோனா தடுப்பு பணிக்கான கிருமிநாசினி, கையுறை, முக கவசம் உள்ளிட்டவற்றை தயாரித்து வழங்கலாம்.தற்போது ஒருசில இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள இப்பணியை விரிவு படுத்தலாம் என முடிவெடுத்தனர். அதேபோல், கழிவறையுடன் கூடிய ரயில் பெட்டிகளை நன்கு சுத்தப்படுத்தி, கொரோனா சிகிச்சைக்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றலாம் என முடிவு செய்துள்ளனர். மருத்துவமனைகள் இல்லாத இடங்களுக்கு, தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளை கொண்டுச் சென்று கொரோனா சிகிச்சையை அளிக்கலாம் என திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை செய்திட ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட கோவை பணிமனையில் மூன்று ரயில்களின் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றும் பணியை ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்குள் மூன்று பெட்டிகள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.