March 24, 2020
தண்டோரா குழு
நள்ளிரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு முடக்கம் என பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
மக்கள் ஊரடங்கில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்றீர்கள், ஒவ்வொரு இந்தியனாலும் அது வெற்றி பெற்றது.சமூக விலகலே கொரோனாவை விரட்டி அடிப்பதற்கான ஒரே வழி, அதைத் தவிர வேறு எந்த பாதுகாப்பு வழிகளும் இல்லை. நாடு மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்திக்கும். ஆனால், இதனை தொடருவதை தவிர வேறு வழி இல்லை.ஒவ்வொரு குடிமகனையும் காப்பாற்றுவதே என் முதல் பணி. அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு.மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.
நோய்த் தொற்றை தடுக்க இது ஒன்றே வழி. அடுத்த சில நாட்களுக்கு வெளியே வருவதை முற்றிலும் தவிருங்கள்.வீட்டுக்குள்ளேயே இருங்கள். வீட்டுக்குள்ளேயே தனித்து இருங்கள்.நீங்களே ஒரு லட்சுமண ரேகையை போட்டுக் கொள்ளுங்கள்.நீங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால். கொரோனா உங்களை தாக்கக் கூடும்.
இப்போது கொரோனா வைரஸ் தாக்கினால், அதை தெரிந்து கொள்ள 14 நாட்கள் ஆகும்.21 நாட்கள் தனிமைப்படுத்தா விட்டால் 21 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடுவோம். ஒருவருக்கு கொரோனா தாக்கினால், அது காட்டுத் தீ போல பரவும்.”ஒருவரை தாக்கும் கொரோனா, 67 நாட்களில் ஒரு லட்சம் பேரை தாக்கும்.அடுத்த 11 நாட்களில் மேலும் ஒரு லட்சம் பேரை தாக்கும்.இதன் மூலம், கொரோனா எவ்வளவு வேகமாக பரவும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
கொரோனா பரவத் தொடங்கினால், அதை தடுத்து நிறுத்துவது பெரிய சவால்.சீனா, அமெரிக்கா, இத்தாலி, ஈரான் போன்ற நாடுகள் அதனால் தான் சிரமப்படுகின்றன.மருத்துவ துறையில் சிறந்து விளங்கும் அமெரிக்கா, இத்தாலியும் திணறுகின்றன.அந்த நாடுகளில் இருந்து பெற்ற படிப்பினை மூலம், கொரோனாவை ஓரளவு தடுக்கலாம்.
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமக்களையும் காப்பாற்ற வேறு வழி இல்லை. ஊடகங்கள் சரியான தகவல் தர 24 மணி நேரமும் உழைக்கிறார்கள்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ₹15,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
கொரோனா தடுப்பில் நாம் வெற்றி பெற்றுவிடுவோம் என நம்புகிறேன்.
வைரஸ் பாதிப்பு என சந்தேகம் ஏற்பட்டால் தானாகவே மருந்துகளை உட்கொள்ளக் கூடாது. வதந்திகளையும், மூட நம்பிக்கைகளையும் நம்ப வேண்டாம்; அரசின் ஆலோசனைகளை மட்டும் மக்கள் பின்பற்ற வேண்டும்.