March 20, 2020 தண்டோரா குழு
கொரோனா வைரஸ் குறித்து வதந்திகள் கிளப்பி வீடியோ வெளியிட்டு வருவதாக எழுந்த புகாரின்பேரில் குனியமுத்தூர் போலீசார் ஹீலர் பாஸ்கரை கைது செய்துள்ளனர்.
மருத்துவத்துறையை நம்பாமல் வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்க்கலாம் என்ற பரபரப்பான கருத்தை வெளியிட்டு கோவையில் கைது செய்யப்பட்டவர் ஹீலர் பாஸ்கர். இவர் ஆங்கில மருத்துவங்கள் வணிக ரீதியானது என்றும் அனைத்து வகை நோய்களுக்கும் எளிய முறையில் மருத்துவ சிகிச்சை உள்ளது என்றும் தொடர்ந்து பேசிவருகிறார்.
இந்த நிலையில் இவர் கொரோனா வைரஸ் குறித்தும் அதன் மருத்துவங்கள் குறித்தும் தொடர்ச்சியாக தனது கருத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.இப்படியிருக்க செய்தியாளர் சந்திப்பின்போது அமைச்சர் விஜயபாஸ்கர் தவறான தகவல் பரப்பும் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் குனியமுத்தூர் போலீசார் ஹீலர் பாஸ்கரை கைது செய்துள்ளனர். இதையடுத்து அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இதனைத் தொடர்ந்து கோவை நீதிமன்றம் ஹீலர் பாஸ்கருக்கு ஏப்ரல் 3ஆம் தேதி வரை நீதிமன்றக்காவல் விடுத்துள்ளது.