March 18, 2020
தண்டோரா குழு
தலித் சமூகத்தை சமூக வலைதளங்களில் கலங்கப்படுத்தும் மெளலான முகம்மது காஷிஃபி காசிமி மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி பாஜகவினர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவராக எல். முருகன் அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து அவரையும், அவர் சார்ந்த பட்டியலினத்தையும் அவமானப்படுத்தும் வகையில் சென்னையைச்சேர்ந்த மெளலான முகம்மது காஷிஃபி காசிபி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவர் பாஜகவின் தலைவராக கொண்டு வருவதற்கு காரணம் அவர்களை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்புவதற்கு என பதிவிட்டுள்ளார். மேலும் தலித் மக்களுக்கு பணம் கொடுத்து அவர்களை முஸ்லிம்களுக்கு, சகோதரர்களாகவும் நண்பர்களாகவும் மாற்றவேண்டும். மதுபானத்திற்கும், காசுக்காகவும் பட்டியலின மக்கள் விலை போய் விடுவார்கள் என மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவானது மத இன மோதல்களை உருவாக்குவதோடு, தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தும் வகையில் திட்டமிட்டே பதிவிட்டுள்ளதாக குற்றம் சாட்டி, கோவை மாநகர பாஜகவினர் காவல் ஆணையாளரிடம் புகாரளித்தனர். அந்த புகாரில் பட்டியலின மக்களை அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்டவர் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் பதிவு செய்ய வலியுறுத்தினர். மேலும் பட்டியலின மக்களை அவதூறாக பேசியதற்கு எந்த பட்டியலின தலைவர்களும் கண்டனம் தெரிவிக்காமல் இருப்பதை கண்டித்தனர்.