March 16, 2020
தண்டோரா குழு
உளவுத்துறை தகவலை அடுத்து கோவையில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் கோவையில் கடந்த ஒரு மாதமாக ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆனந்த், ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர் சூர்யபிரகாஷ், எஸ்.டி.பி.ஐ. பிரமுகர் சாகுல் ஹமீத் ஆகியோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும், கோவை இந்து முன்னணி அலுவலகம் மற்றும் பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களும் நடந்தன. இதனால் கோவை மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில், கேரளாவில் இருந்து ஒரு கும்பல் கோவைக்குள் ஊடியிருப்பதாகவும், அவர்கள் கோவையில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் உளவுத்துறை மூலம் கோவை மாநகர போலீசாருக்கும், கோவை மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து, போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன் தலைமையில் ஆயிரம் போலீசாரும், காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தலைமையில் ஆயிரத்து 100 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் சி.ஆர்.பி.எப். போலீசாரும் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
மேலும், கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் 12 வழித்தடங்களிலும் செக் போஸ்ட் அமைக்கப்பட்டு அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், கோவையில் மேலும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.