January 16, 2020 தண்டோரா குழு
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு காவி உடையுடன் திருவள்ளுவர் படத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து காவி உடை திருவள்ளுவர் படத்தை வெங்கையா நாயுடு நீக்கினார்.
இதனையடுத்து வழக்கமான வெள்ளை உடையுடன் திருவள்ளுவர் படத்தை பகிர்ந்துள்ளார். அதில், சிறந்த தமிழ்ப் புலவரும், தத்துவவாதியும், ஞானியுமான திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் நினைவு கூர்கிறேன். அவர் நமக்கு அளித்த திருக்குறள் இந்த உலகில் உன்னதமான வாழ்க்கையை வாழ்வதற்கு மனிதகுலத்திற்கு வழிகாட்டுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், காவி திருவள்ளுவர் படத்தை நீக்கியது தொடர்பாக விளக்கம் அளித்து வெங்கைய்யா பதிவிட்டுள்ள டுவீட்டில், முன்னர் பதிவிடப்பட்ட படம், துணை ஜனாதிபதி அலுவலகம் தவறுதலாக பதிவிட்டதாகும். ஊழியர் ஒருவர் தவறுதலாக பதிவிட்டுள்ளார். அது தவறான படம் என சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து, அப்படம் நீக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.